ஜெயலலிதாக்களும், கருணாநிதிகளும் நாசமாய்ப் போகட்டும்


நாளை முதல் மின்சாரக்கட்டணம் மிகக் கடுமையாக உயர இருக்கிறது. ‘புதிய தலைமுறை’ டிவி வாசித்த கட்டண உயர்வு செய்திகளைக் கேட்டவர்கள் அதிர்ந்துபோய் இருக்கிறார்கள். வாழ்க்கையையே  பெரும் சுமையாகிப் போக வைத்த பெருமை ‘அன்புச் சகோதரி’ ஜெயலலிதாவுக்கே இப்போது சேரும்.

‘தான்  ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் மின்வெட்டை சரிசெய்வதாகவும், கருணாநிதி ஆட்சியின் அலங்கோலங்களைச் சரி செய்வதாகவும்’ இரட்டை விரல் காட்டி காட்டி ஓட்டு கேட்டார் ஜெயலலிதா. பதவிக்கு வந்தவுடன், கருணாநிதியின் பொறுப்பற்ற ஆட்சியைக் காரணம் காட்டி, பஸ்கட்டணம், பால் கட்டணம் எல்லாவற்றையும் அதிரடியாக அறிவித்தார். இதற்குப் பிறகும் என்னை சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் தோற்கடித்துப் பாருங்கள் என சவால் விட்டார். அமைச்சர் பெருமக்கள் எல்லாம் அங்கே முகாமிட்டு, கொடுக்க வேண்டியதைன் கொடுத்து, பெற வேண்டியதைப் பெற்றதும், மமதையில் கொக்கரித்தார் ஜெயலலிதா. அங்கே தோற்றவர்கள் கருணாநிதியல்ல, வை.கோ அல்ல, விஜய்காந்த்தும்  அல்ல. மக்களே.  கூடவே இந்த விளங்காத ஜனநாயகமும்தான்.

அந்தக் கொழுப்பில்தான் இப்போது மின்சாரக் கட்டண உயர்வு அறிவிக்கப்படுகிறது. அமலுக்கு வருகிறது. இப்போது  ‘கருணாநிதி எவ்வளவோ தேவலை’ என அதே வாக்காளர்கள் பேசுகிறார்கள். இதுதான் ஜெயலலிதா ஆட்சியின் சாதனை! இப்படித்தான் கருணாநிதி தனது ஆட்சியில், ‘ஜெயலலிதா எவ்வளவோ தேவலை’ என்னும் பேரை  சம்பாதித்துக் கொடுத்தார்.  இந்த இருவரும்தான் தங்களுக்கு எதாவது செய்வார்கள் என  மக்கள் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். அந்த நம்பிக்கையை ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்படுத்துவதும், அழிப்பதும் கருணாநிதியும், ஜெயலலிதாவுமே. அவர்களுக்கு இது அதிகாரப் போட்டி. ஆனால் மக்கள் பணயம் வைத்து இழந்து கொண்டு இருப்பதோ தங்கள் வாழ்க்கையை.

இவ்வளவு சுமைகளுக்குப் பிறகும் மக்கள் தங்கள்  இருவர் மீதும் ஒட்டுமொத்தமாக கோபப்பட மாட்டார்கள் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். தங்களில் யாராவது ஒருவர் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிவிடமுடியும் என்கிற அதீத நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. இருவரும் ஒருவருக்கொருவர் பகைமை கொண்டிருந்தாலும், இருவருமே மக்களின் பகைவர்கள் என ஒருபோதும் அறியப்பட மாட்டோம் என்னும் மமதையை இந்த ஜனநாயகம் அவர்களுக்கு வழங்கி இருக்கிறது. இதுதான் இன்றைய பிரச்சினைகளுக்கு மூலம், வேர் எல்லாம். அந்த இடத்தில் மக்கள் தங்கள் ஆத்திரத்தையும் வெறுப்பையும் வெடியாக வைக்க வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டில்  திமுக, அதிமுக என்னும் இந்த தோற்றம்தான்,  இந்தியாவைப் பொறுத்த வரையில் காங்கிரஸ், பா.ஜ.க என்னும் தோற்றமாக நீடிக்கிறது. இவர்களில் யார் ஆட்சியில் இருந்தாலும் முதலாளித்துவம் புன்னகைக்கும். ஆட்சியின் பலன்களை அனுபவிக்கும். இவர்கள் அனைவருமே நாசமாய்ப் போகட்டும் என மக்கள் உணர்வதில்தான், மக்களின் காலகாலமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அதற்கு அவர்கள் “ஜெயலலிதாக்களும், கருணாநிதிகளும் நாசமாய்ப் போகட்டும்” என முதலில் பேசத் துவங்க வேண்டும். அது, இந்த நாடு பெருமை பேசும் ஜனநாயகத்திற்கு ஏற்படும் நிலநடுக்கமாக இருக்கும்.

மக்கள் நாசமாய்ப் போவதற்கு காரணமான இவர்கள் நாசமாய்ப் போவதுதானே சரி?

Comments

Post a Comment

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

கலாய்ச்சுட்டாராமாம்...

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்