டிமாண்ட்டி காலணி விமர்சனம்

http://www.thoovaanam.com/?p=922
தமிழ் சினிமாவை சந்திரமுகியில் பிடித்தது இந்த பேய்(சீசன்), கொஞ்சம் இடைவெளி விட்டு பீட்ஸா விலிருந்து வருடத்திக்கு 4 பேய் படமாவது வந்து கொண்டே இருக்கிறது, அதை வரிசை படுத்தி நான் போட்ட ட்விட்தான் என்னுடையதில் அதிகமாய் பகிரபட்டது.
பேயை பார்த்து
பயந்தா – பீட்ஸா, காஞ்சனா
சிரிப்பு வந்தா – யாமிருக்க பயமே
மூடு வந்தா – அரண்மனை
அழுகை வந்தா – பிசாசு
பயமுறுத்தற பேய் பட வரிசைல ‘டிமாண்ட்டி காலணி’ படத்தையும் சேர்த்துக்கலாம், நான்கு அறைத்தோழர்கள், ஒரு எலக்டரீசியன், ஒரு இயக்குனராக முயலும் இளைஞன், போட்டோஷாப் டிசைனர், நான்காவதாக நாயகன் அருள்நிதியின் தொழிலை படத்தில் நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். முதல் 25 நிமிடங்கள் வரை இது ஒரு பேய் படம் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். சராசரியாக போகும் கதையில் ஒரு நாளிரவு விளையாட்டாக பேய் வீடான டிமாண்டி காலணிக்கு செல்கிறார்கள், நால்வரில் ஒருவரான எலக்ட்ரீசியன் மிகவும் பயந்த சுபாவம் உடையவர், அவரை மற்றவர்கள் மறைந்திருந்து பயமுறுத்துகிறார்கள், அப்போது அங்கங்கே சில அமானுஷ்யங்கள் தென்படுகின்றன. அங்கே ஆரம்பிக்கும் திகில் படத்தின் இறுதி காட்சி வரை தொடர்கிறது.
ஜான் டிமாண்ட்டி என்ற 100 வருடத்திற்கு முன்பு சென்னையில் பெரிய மாளிகையில் வசித்த வெள்ளைக்காரர் பெரும் செல்வந்தர், அவரது மனைவிக்காக ஒரு தங்க சங்கிலி வாங்குகிறார், அது வந்ததில் இருந்து பிரமை பிடித்தது போல் இருக்கும் அவரது மனைவியை தனியே விட்டு விட்டு, கல்கத்தாவில் இருக்கும் சொத்துகளை விற்றுவிட்டு 5 மாதங்கள் கழித்து வரும் டிமாண்டிக்கு அவரது மனைவி கும்பலாக சில பேரால் கற்பழிக்க பட்டது தெரிய வருகிறது, இவ்வளவு பெரிய மாளிகையில் இத்தனை பாதுகாப்பிற்கு நடுவில் தம் மனைவிக்கு இப்படி ஒரு கொடுரம் நிகழ்ந்திருக்கிறது எனில் மாளிகையில் இருக்கும் வேலைக்காரர்கள் சம்பந்தப்படாமல் நிகழ்ந்திருக்காது என் கண்ணில் படும் அனைத்து வேலைக்காரர்களையும்  சுட்டு கொன்று விட்டு, மாளிகையை கொளுத்தி மனைவியோடு தற்கொலை செய்து கொள்கிறார். அதன் பின் அந்த மாளிகைக்கு சென்ற யாரும் உயிர் வாழ்வதில்லை, இது தெரியாமல் விளையாட்டாய் அங்கு சென்று விட்டு வரும் 4 பேரையும் தொடரும் அமானுஷ்யங்களில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா என்பதே 80% படம்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உண்மையிலேயே பேய் கதைகள் பேசப்படும் டிமாண்ட்டி காலணியை வைத்து தான் இந்த கதையை எழுதி இருக்கிறார் இயக்குனர். எங்கே இருந்து அந்த டிமாண்டி வெள்ளைக்காரனை பிடித்தவர்கள் என்றே தெரியவில்லை, கிட்டத்தட்ட 7 அடி உயரம். மாளிகையை சுற்றி மக்கள் தீப்பந்தத்துடன் கதவை உடைக்கையில் அந்த உடைக்கும் சப்தத்திற்கு சரியாக கையிலிருக்கும் வேட்டை துப்பாக்கியை தரையில் இடிக்கும் போது, அப்பப்பா கொடுரம் தான்.
படத்தில் கிளர்ச்சியுட்ட எந்த நாயகியும் இல்லை, தேவையே இல்லை,  சில இடங்களில் மட்டும் சிரிக்க வைத்துவிட்டு மற்ற அனைத்து இடங்களிலும் பயமுறுத்துகிறார்கள், அதற்காக கோரமான உருவம் கொண்ட பேய்கள் இல்லை. அடுத்து என்ன நடக்கும்? எப்படி தப்பிப்பார்கள் என்றே முழுதாய் நம்மை யோசிக்க செய்து சீட்டின் நுனிக்கு தள்ளுகிறார்கள்.
சில இடங்கள் வேற்று மொழியில் வந்த காட்சிகளை நினைவு படுத்துகின்றன, காட்சிகள் மட்டும் தான், தமிழில் கட்டாயம் இது புதிய முயற்சி தான், பிண்ணனி இசையும் கேமராவும் படத்திற்கு பெரிய பலம்.
புது மாப்பிள்ளை அருள்நிதி முகத்தில் கல்யாண களை அதிகமாகவே தெரிகிறது, உதயநிதியுடன் என்ன பிரச்சனையோ ஒரு இடத்தில் வாரி இருக்கிறார்.
“காமெடி கதை வேணும், எப்படின்னா செலவே இல்லாம படம் முழுக்க 2 பேரும் பேசிட்டு இருக்கனும், யார் ஹீரோ யார் கமெடியன்னே தெரிய கூடாது, அப்புறம் கவர்ச்சியான ஹீரோயினை வச்சு 5 பாட்டு”
படத்தில் ரொம்ப பயப்படுபவராய் வருபவர் வெறுமனே படுத்து தூங்கி கொண்டே நம்மை பயமுறுத்துகிறார். நாடி ஜோதிடராய் வரும் எம்.எஸ். பாஸ்கர் சொல்லும் விஷயத்தில் இருந்து தான் படம் மின்னல் வேகம் எடுக்கறது. கொஞ்சம் வில்லா, கொஞ்சம் பீட்ஸா, கொஞ்சம் சிக்ஸ்த் சென்ஸ் படங்களில் இருந்து எடுத்து கதைக்கான களத்தை உருவாக்கி இருக்கிறார்கள், திரைக்கதை தமிழிற்கு புதிது.
சூது கவ்வும் ரமேஷ் அவரது பாத்திரத்தை இயல்பாய் செய்திருக்கிறார், ஒரு காட்சியில் வந்தாலும் பன்னி மூஞ்சி வாயனும் , சிங்கம்புலியும், பாஸ்கரும் மனதில் நிற்கிறார்கள்.
பேய் வீட்டில் இருந்து வருபவர்களுக்கு என்ன மாதிரியான தொந்தரவு வருகிறது? தப்பிக்க எடுக்கும் முயற்சிகள், தப்பித்தார்களா என்று சொல்லி படத்தின்  சுவாரசியத்தை கெடுக்க விரும்பவில்லை, கண்டிப்பாய் பயமுறுத்தும் இப்படத்தை நம்பி திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம்.


Comments

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

கலாய்ச்சுட்டாராமாம்...

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்