பழகிய முகங்களை மறக்கும் பெண்-FACES IN THE CROWD- திரைவிமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், தற்போதைய சூழலில் சினிமா பார்க்காதவர்கள் யாருமில்லை, அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை. சிலருக்கு காதல் படங்கள், சிலருக்கு ஆக்சன், சிலருக்கு காமெடி என்று விதவிதமாக இருப்பார்கள், எனக்கு எப்பொழுதும் ரொமென்டிக் காமெடி வகை படங்கள் தான் மிகப் பிடிக்கும். நமது சகப்பதிவர் ஜாக்கி சேகர் அனைத்து விதமான உலக சினிமாக்களையும் பார்த்து, நம்முடன் பகிர்ந்து கொள்வார், அவரது அறிமுகத்தில் வித்தியாசமான கதைக்களமாக பட்டதால் இந்தப் படத்தை பார்த்தேன். படத்தின் பெயர் "FACES IN THE CROWD".
 
சராசரியாக தோழிகளுடன் அரட்டையும் சிறுபிள்ளைகளுக்கான பள்ளியில் ஆசிரியர் பணியும் மனதுக்கு பிடித்தவருடன் வாழ்க்கையும் என அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் கதா நாயகிக்கு எதெச்சையாக ஒரு அதிர்ச்சி தரக் கூடிய சம்பவம் நடக்கிறது. யாருமில்லா பாலத்தில் நடந்து செல்லும் போது ஒரு கொலையை தற்செயலாக பார்க்கும் ஹீரோயினை கொலைகாரன் துரத்தி பிடித்து பாலத்திலிருந்து தள்ள மண்டையில் பலத்த காயத்துடன் ஆற்றில் விழுகிறார்.

ஆஸ்பத்திரியில் கண் விழிக்கும் கதா நாயகிக்கு பெரும் அதிர்ச்சி, வாழ்வின் அனைத்தும் நினைவில் இருந்தும் யாருடைய முகமும் நினைவில்லை. அந்த வியாதிக்கு ஏதோ பேர் சொல்கிறார்கள். கஜினி சூர்யாவிற்காவது போட்டோ எடுத்து வைத்து நினைவில் வைத்திருக்க ஒரு வழி இருந்தது. கதையில் ஹீரோயினுக்கு நொடிக்கு நொடி முகம் மாறி மாறி புதிதாய் தெரியும்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த வியாதியுடன் பழகி இருக்க முயற்சி செய்யும் ஹீரோயினுக்கு எல்லாமெ எதிர்மறையாக நடக்கிறது. முதலில் வேலை போகிறது. தினமும் தன்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடும் காதலனின் முகமும் நினைவில் இருப்பதில்லை.
 
எல்லாவற்றிற்கும் மேலாக அந்த சைகோ கொலைகாரன் தன்னை பின்தொடர்வது தெரிந்தும் அவன் முகம் நினைவில் இல்லாததால் பயந்து ஓடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை. ஒரு கட்டத்தில் இவரது வியாதியை ஜீரணிக்க முடியாத காதலன் பிரிந்து விட, கொலைகாரனை தேடிக்கொண்டிருக்கும் போலிஸே புதுக் காதலனாக மாறுகிறார்.
 
படத்தில் ஜீவனே அந்த முகம் மறக்கும் வியாதியும் ஹீரோயினும் தான், ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஹீரொயின் தன்னால் முடிந்த வரை கேரக்டரராகவே வாழ்ந்திருக்கிறார். அவர் பயந்தால் நமக்கும் பயமாயிருக்கும், அந்த அளவுக்கு என்றால் பாருங்கள்.
உண்மையில் நிறைய க்ரைம் நாவல் படித்ததாலோ என்னவோ என்னால் யார் கொலைக்காரன் என்பதை உடனே கண்டறிய முடிந்தது. உங்களால் முடியுமா என்று பாருங்கள்.உலக சினிமா ரசிகர்களுக்கு ஏற்ற படம்.

வந்ததும் வந்தீங்க, மறக்காம கமெண்ட் அ போட்டுட்டு மத்தவங்களோட பகிர்ந்துக்கங்க.

Comments