பெருந்திணை - படலம் - 4
சைந்தவி கண்ணாடி எதிரே நின்று கொண்டிருந்தாள். மேலிருந்து கீழே தன்னை முழுமையாகப் பார்த்தாள். சராசரியான பெண்களை விட கொஞ்சம் கூடுதல் உயரம். அதுவே இவளை மற்ற பெண்களிடமிருந்து பிரித்து காட்டி விடும். அவ்வுயரத்திற்கேற்ற விகிதத்தில் அவயங்கள். கூடவும் இல்லை. குறையவும் இல்லை. மடிப்பில்லாத இடுப்பு. இளமைக்கு இதுதான் முதல் சான்று. கார்த்திக் வரவில்லை என்று சொன்ன பின் தனியாக தயாரானாள். சில விசயங்களுக்கு தனிமை போதை. அதில் குறிப்பிட்டது தன்னை தயார் செய்துக் கொள்வது. இன்னொருவர் முன்பு உடையணிந்து அலங்காரம் செய்வதெல்லாம் அத்தனை ஆசுவாசமானதாக இருக்காது. அதிலும் சைந்தவிக்கு தனிமை. இப்படி நிர்வாணமாக ஓரிரு கணங்கள் தன்னை வெளிச்சத்தில் கண்டுணர்வது எப்போதாவது வாய்ப்பதுதான். அனைவரும் வரவேற்பறையில். இவள் படுக்கையறையில் தயாரானாள். தயாராகும் போதே அசோக்கின் நினைவு வந்தது. அவன் வருவான் என்று அனிதா சொன்னாள். அன்றைய தினத்திற்கு பிறகு அவன் தன்னை பார்வையால் தீண்டவில்லை என்பது நல்லதாகப் பட்டாலும் அதற்குள்ளாக முடிந்து விடும் என்பதில் அவளுக்கே நம்பிக்கை வரவில்லை. இத்தனை அழகுடன் எத்தனை பேரை கடந்து வந்திருப்பாள்? அல...